லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. இந்தியாவை விட்டே போகிறோம்.. சென்னை நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!
சென்னையை சேர்ந்த வின்ட்ராக் இன்க் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் கடந்த 45 நாட்களாக சென்னை சுங்கத்துறையால் துன்புறுத்தலுக்கு ஆளானதை காரணம் காட்டி, அக்டோபர் 1 முதல் இந்தியாவில் தங்கள் இறக்குமதி-ஏற்றுமதி செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக 'எக்ஸ்' தளத்தில் அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு மட்டும் இரண்டு முறை லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், லஞ்சம் கொடுக்காததால் அதிகாரிகள் பழிவாங்கலில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக இந்தியாவில் தங்கள் வணிகம் அழிந்துவிட்டதாகவும்" வின்ட்ராக் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் 'வணிகம் செய்வதற்கான சூழல் இல்லை, மாறாக, அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஊழல்தான் இருக்கிறது," என்று அந்த நிறுவனம் தனது பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த ட்வீட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை டேக் செய்து, "எங்கள் துறைமுகங்களில் உள்ள கட்டமைப்பு ஊழலை ஒழிக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை சுங்கத்துறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளது.
Edited by Mahendran