பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை தொடர்ந்து, 'இந்தியா' கூட்டணியின் தலைமை பொறுப்பை மாற்றும் பேச்சு எழுந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று லக்னோ மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ரவிதாஸ் மெஹ்ரோத்ரா வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, உ.பி.யில் தனியாக ஆட்சி அமைக்கும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். பிகாரில் காங்கிரஸ் கட்சி 2020-இல் வென்ற 19 இடங்களில் இருந்து, இம்முறை வெறும் 6 இடங்களை மட்டுமே வென்றது. தொடர்ச்சியான மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருவதால், கூட்டணியில் தலைமை மாற்றத்திற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. இதற்கு முன், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை 'இந்தியா' கூட்டணிக்குத் தலைமை ஏற்க முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அகிலேஷ் யாதவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதால், கூட்டணியின் தலைமை பொறுப்பு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. Edited by Siva