புதன், 26 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran

காங்கிரஸ் தலைவர் கார் மீது மோதிய சுரேஷ் கோபி மகன் கார்.. கேரளாவில் பெரும் பரபரப்பு..!

காங்கிரஸ் தலைவர் கார் மீது மோதிய சுரேஷ் கோபி மகன் கார்.. கேரளாவில் பெரும் பரபரப்பு..!
திருவனந்தபுரத்தில்  மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் வினோத் கிருஷ்ணா ஆகியோர் சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
போலீஸ் தகவல்படி மாதவ் தனது காரில் பயணித்து கொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் வந்த வினோத் கிருஷ்ணாவின் கார் யூ-டர்ன் எடுத்தபோது இரு கார்களும் நேருக்கு நேர் மோதியது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள், மாதவ் வேண்டுமென்றே வினோத் கிருஷ்ணாவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவ் மது அருந்தியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், போலீசார் நடத்திய சோதனையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது உறுதியானது. அதேபோல், வினோத் கிருஷ்ணா காரை ஓட்டும்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக மாதவ் போலீசாரிடம் கூறினார்.
 
விசாரணைக்குப் பிறகு, இரு தரப்பினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் புகார் அளிக்க விரும்பவில்லை. இதையடுத்து, இருவரையும் போலீசார் விடுவித்தனர்.
 
மறுநாள், இந்தச் சம்பவம் குறித்து மாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்தார். அதில், "வினோத் கிருஷ்ணாவுக்கு எதிராக எந்தப் புகாரும் இல்லை. நாங்கள் இருவரும் தவறு செய்ததை உணர்ந்து கொண்டோம் என்று பதிவு செய்துள்ளார்.
 
 
Edited by Mahendran