இந்திய எல்லையில் 17 வயது இளைஞர், 15 வயது சிறுமி பிணம்.. பாகிஸ்தான் சிம்கார்டு, அடையாள அட்டை..!
ராஜஸ்தான் மாநிலடத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே, பாதி சிதைந்த நிலையில் ஒரு சிறுமியின் உடலும், ஒரு இளைஞரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்குள் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து பாகிஸ்தான் சிம் கார்டு, அடையாள அட்டைகள், ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சுதீர் சவுத்ரி கூறுகையில், சடலங்கள் சர்வதேச எல்லையிலிருந்து இந்திய பகுதிக்குள் சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தேவாலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இறந்தவர்கள் 17 வயது ரவி குமார் மற்றும் 15 வயது சாந்தி பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது
இறந்தவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் 2023 இல் வழங்கப்பட்டவை என்றும், அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. . ரவி குமார் என்ற இளைஞரின் பாகிஸ்தான் சிம் கார்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, சடலங்கள் சிதைந்திருந்த அளவைப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சடலங்கள் ராம் கர் சமூக சுகாதார மையத்தின் சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடற்கூராய்வுக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
இருவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்கு திரும்ப முயற்சித்தார்களா அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Edited by Mahendran