1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 22 ஜூன் 2025 (14:47 IST)

கிளம்பிய விமானத்தை பிடிக்க ரன்வேயில் ஓடிய இளைஞர் கைது.. பாதுகாப்பு குளறுபடியா?

மும்பையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தான் தவறவிட்ட விமானத்தை பிடிப்பதற்காக, மும்பை விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட ஓடுபாதை பகுதியில் ஓடியதால் கைது செய்யப்பட்டார். இது விமான நிலைய பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடாக பார்க்கப்படுகிறது.
 
பியூஷ் சோனி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் மும்பை விமான நிலையத்திற்கு காலை 9:50 மணியளவில் வந்துள்ளார். அப்போது, பாட்னா செல்லும் அவரது ஏர் இந்தியா விமானத்திற்கான போர்டிங் நேரம் முடிந்துவிட்டிருந்தது. விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டது என்பதை அறிந்த சோனி, பதற்றமடைந்து ஓடுபாதையில் இருந்த ஒரு விமானத்தை பிடிக்க ஓட தொடங்கியுள்ளார். தான் எந்த விமானத்தை நோக்கி ஓடுகிறார் என்பதுகூட அவருக்கு தெரியவில்லை; அது உண்மையில் அவர் செல்ல வேண்டிய விமானமே அல்ல.
 
ஓடுபாதையில் பியூஷ் ஓடியதை பார்த்த  அங்கிருந்த ஊழியர்கள் அவரை விரட்டி பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் எந்த விமானமும் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ இல்லை, இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
இதனையடுத்து மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்த இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், விமானச் சட்ட விதிமீறல்களின் கீழும் சோனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran