ஆடம்பர திருமணம்.. 19 பிளாட், வில்லா, 3 அடுக்குமாடி வீடு.. ஒரு எஞ்சினியருக்கு இவ்வளவு சொத்தா? எப்படி?
தெலங்கானா நீர்ப்பாசனத் துறையில் செயற்பொறியாளராக இருக்கும் நூனே ஸ்ரீதர் என்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அம்பலமாகியுள்ளது.
மகனுக்கு தாய்லாந்தில் கோடிகளில் செலவு செய்து திருமணம், ஒரு ஆடம்பர பங்களா, மூன்று தனி வீடுகள், 19 மதிப்புமிக்க குடியிருப்பு நிலங்கள், நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஹோட்டல்களில் பங்குதாரர் என இவரின் வாழ்க்கை ஒரு பெரிய தொழிலதிபரை மிஞ்சிவிட்டது.
நேற்று முன்தினம் ஸ்ரீதருக்கு சொந்தமான 13 இடங்களில் நடந்த சோதனையில், வருமானத்திற்கு அதிகமான பலமடங்கு சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹைதராபாத்தில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள், கரீம்நகரில் உள்ள பல ப்ளாட்டுகள், விவசாய நிலங்கள், ரொக்கம், நகைகள் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
ஸ்ரீதர், உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான காலேஷ்வரம் லிஃப்ட் இர்ரிகேஷன் திட்டத்திலும் சம்பந்தப்பட்டவர் என்பதும், இந்தத் திட்டம் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் கூட இந்தத் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது ஸ்ரீதர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நிதி ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
Edited by Siva