1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (10:22 IST)

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

indigo
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் அண்மைக்காலமாகத் தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று மட்டும் மூன்று வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
 
டெல்லியிலிருந்து லே நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் 6E 2006, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக டெல்லியிலேயே தரையிறங்கியது. சுமார் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்த இந்த விமானம், லே-யை நெருங்கியதும் மீண்டும் டெல்லிக்கு திரும்பியுள்ளது. நல்லவேளையாக, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 
நேற்று மீண்டும் புவனேஸ்வரில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த இண்டிகோ விமானம் 6E 6101, புறப்பட தயாராக இருந்தபோது, விமானிக்கு தொழில்நுட்ப கோளாறு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டதும், விமானம் புறப்படுவதை ரத்து செய்துவிட்டு, பாதுகாப்பாக பார்க்கிங் பகுதிக்கு திரும்பியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
 
அதே நாளில், ராய்ப்பூர் விமான நிலையத்தில் டெல்லி-ராய்ப்பூர் இண்டிகோ விமானம் தரையிறங்கியதும் பதற்றமான சூழல் நிலவியது. விமானக் கதவு திடீரென சிக்கிக்கொண்டதால், சுமார் 40 நிமிடங்கள் பயணிகள் விமானத்திற்குள்ளேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. தரையிறக்கம் சரியாக நடந்தாலும், கதவு திறக்கப்படாததால், பயணிகள் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே கதவை திறந்து, பயணிகளை வெளியேற்றினர்.
 
இண்டிகோ விமானங்களில் தொடரும் இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள், பயணிகளின் பாதுகாப்பைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
 
Edited by Mahendran