1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (11:00 IST)

30 மணி நேரத்தில் செய்த வேலையை 5 மணி நேரத்தில் செய்கிறேன்.. ChatGPT குறித்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு  கருவியைப் பயன்படுத்த தொடங்கியபின்பு தனது உற்பத்தித்திறன் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது விரிவுரைகளை தயாரிக்க இந்த கருவி பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
78 வயதான இந்த தொழில்நுட்ப முன்னோடி, முன்பு ஒரு விரிவுரையைத் தயாரிக்க 25-30 மணிநேரம் எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் மகன் ரோஹன் மூர்த்தி ChatGPT-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, அது வெறும் 5 மணிநேரமாக குறைந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். 
 
AI தனிப்பட்ட உற்பத்தித்திறனுக்கு மட்டுமல்ல, முழு தொழில்நுட்பத் துறைக்கும் சக்திவாய்ந்தது என்று நாராயண மூர்த்தி கூறினார். இந்திய ஐடி நிறுவனங்கள் AI கருவிகள் மூலம் செயல்திறனை அதிகரித்து, பிழைகளை குறைத்து, பணிகளை விரைவாக முடிக்க முடியும் என நம்புவதாகவும்,  AI, மனித உழைப்புக்கு பதிலாக அல்லாமல், ஒரு உதவிக்கருவியாகவே செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.
 
1970களில் வங்கிகளில் கணினிகள் அறிமுகமானபோது வேலை பறிபோகும் என அஞ்சப்பட்டதை போல, இப்போதும் AI குறித்து அநாவசிய அச்சம் தேவையில்லை என்றார். அந்த கணினிகள் பின்னர் வேலைவாய்ப்புகளை பன்மடங்கு பெருக்கியதை போல, AI-யும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் உறுதியளித்தார். 
 
ChatGPT-ஐப் பயன்படுத்தியபோது, தெளிவான கட்டளைகள் கொடுப்பதே உண்மையான திறமை என்பதை உணர்ந்ததாக குறிப்பிட்ட அவர், இதில் மனித அறிவே முக்கியம் என்றார். எதிர்காலத்தில் AI தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பதில் நாராயண மூர்த்தி உறுதியாக உள்ளார்.
 
 
Edited by Mahendran