1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2025 (09:36 IST)

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

இந்தியாவில் எந்த முக்கிய சேவைக்குச் சென்றாலும், அது ரயில் டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், அல்லது வங்கி கணக்கு தொடங்குவதாக இருக்கட்டும், முதன்முதலில் கேட்கப்படுவது ஆதார் அட்டை. ஆனால், எப்போதும் நம் ஆதார் அட்டையை கையில் எடுத்து செல்வது சில சமயங்களில் சாத்தியப்படாமல் போகலாம். இந்த சங்கடத்திற்கு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சூப்பர் தீர்வை கொண்டு வந்துள்ளது.
 
வரும் காலங்களில் UIDAI ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி உங்கள் போனில் இருந்தால், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் ஆதாரை மிக எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும். இனி ஆதார் ஜெராக்ஸ் எடுக்க கடைகளை தேடி அலைந்து நேரம் விரயமாக்க தேவையில்லை.
 
இந்த செயலியில், உங்கள் ஆதார் தகவல்கள் கியூ.ஆர். கோடு வடிவில் இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், உங்கள் ஆதார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். மேலும், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும்போது, முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமா, அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட  வடிவில் வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இது உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு உதவும்.
 
இந்த புதிய வசதி மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், வீணாக அலைந்து திரிவதும் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva